வெள்ளி, 12 ஜூன், 2009

சிற்பங்கள்

மௌனத்தில் உறைந்த சிற்பங்கள்
தன் அழகின் தீராத நாவுகளால்
முற்றுப் புள்ளியில்லாமல் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன...

சிவதாண்டவத்தின் போதும்
புரண்டு படுக்காத உறக்கத்தை
சூரியனாய் துயிலெழுப்பிய விரல்களை...

வைராக்கியங்களாய் இறுகிக் கிடந்த போதும்
வைரம் பட்ட கண்ணாடியாய்
இளகியதால் பெற்ற பேறு...

அறுத்துக் கொண்டிருந்தாலும் இழந்ததை
பொறுத்துக் கொண்டிருக்கும் கரைகளால்
நதியென்ற பெருமை...

முன்னவன் அடைந்த ஞானப்பழத்தை
விட்டுக்கொடுத்ததால்
இளையவன் பெற்ற வெற்றிச் சிகரம்...

கரடுமுரடுகளையும் காண
கண்கோடி கேட்கும் நிலவின்
வசீகர அழகு வசிக்கிற பார்வை...

கண்திறக்கவே வழியில்லாத
கர்ப்பப் பூமியில்
கலையாகி நிற்கும் சரித்திரம்...

இப்படி
மௌனத்தில் உறைந்த சிற்பங்கள்
தன் அழகின் தீராத நாவுகளால்
முற்றுப் புள்ளியில்லாமல் எப்போதும்
பேசிக்கொண்டிருக்கின்றன...

தன்னை நினைத்து
மனிதர்களைப் பார்த்து
நெட்டி முறித்து நிமிர்ந்து நின்றது
ஒரு சிற்பம்!
******

3 கருத்துகள்: