வியாழன், 11 ஜூன், 2009

மெழுகுபொம்மை


உனக்குள்ளே சலனமில்லை
உன்னைச்சொல்லிக் குற்றமில்லை
உன்மேனி மெழுகியவன்
உண்மையிலே ஞானியவன்

கம்பன் கவியழகும்
ரவிவர்மன் கலையழகும்
இங்கு உயிர்த்தனவோ
இதயத்தை ஈர்க்கிறதே

செங்காந்தள் மென்விரலும்
செல்வியரின் கொடியிடையும்
எல்லாமாய் உனக்கிருக்கும்
எழுதிவைத்த விழியழகும்

ஆடையில்லை என்றாலும்
அழகென்றே சொல்கிறது
ஆசைகளைத் தூண்டிவிட்டு
மோகத்தால் கொல்கிறது

அலைகடலாய் இருந்தாலும்
அமைதியாக நடிக்கின்றாய்
ஆணவத்தின் சுவடுகளை
அடிக்காலால் மிதிக்கின்றாய்

சிகரத்து உச்சிகளின்
சிற்றரசன் எனைநீதான்
சிதறடித்தாய் பள்ளங்களில்
சிரிக்காதே சொல்லிவைத்தேன்

ஆயிரமாய் கனவுகளை
அடிமனதில் எழுப்பிவிட்டு
மௌனப்போர் நடத்துகிறாய்
மன்னிக்க மாட்டேன் நான்

நிலையில்லா உன்னழகு
நிஜம் பலவே சொன்னாலும்
உருவமில்லா வெப்பத்தால்
உருகிவிடும் நினைவில்கொள்!
******

1 கருத்து: